Sunday, December 10, 2017

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி மாபெரும் பேரணி

Advertisement
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை நேற்று காலை நடாத்தினர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையினை வலிறுத்தியும், அரசாங்கத்தினை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.

கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும் போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"அரசே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீயே பொறுப்பு கூறவேண்டும், சிறைச்சாலைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்து, மரணச் சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம், சர்வதேசமே எமக்காக குரல்கொடு அதற்காக அழுத்தம் கொடு, எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், எனது மகன் எங்கே?, எனது அப்பா எங்கே?, காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை திறந்து சர்வதேசத்தினை ஏமாற்றாதே" போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.

அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணையத்தின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தமது பிள்ளைகள் இன்னும் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: