Saturday, December 2, 2017

இலங்கைக் கடற்கரையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Advertisement

ஒக்கி புயல் மற்றும் கடல் சீற்றங்களுக்குப் பின்னர் இலங்கையில் கடற்கரை பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் சனிக்கிழமை கரை வலை இழுத்த மீனவர்கள் வலையில் ஒரு டன் எடை கொண்ட பல்லாயிரக்கணக்கான கடல் பாம்புகள் சிக்கி மீனவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஒக்கி புயலினால் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் இலங்கையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாவும், 60 பேருக்கும் காயமடைந்துள்ளதாகவும், 5 பேர் ஐந்து பேர் காணாமல்போகியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் கனமழையினால் மண்சரிவு ஏற்படக் கூடிய மாவட்டங்களாக நுவரெலியா, பதுளை, மாத்தளை, ரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதலானவை இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடற்கரையில் கொட்டப்பட்டிருக்கும் கடல் பாம்புகள்.

ஒக்கி புயலினால் கடந்த ஒரு வார காலமாக இலங்கையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்திருந்தனர். இலங்கையின் கடற்பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கரை வலை தொழிலில் ஈடுபட்டு அனைத்து மீனவர்கள் வலையிலும் சுமார் ஒரு டன் எடையில் கடல் பாம்புகள் சிக்கி உள்ளன.

இது குறித்து அப்பகுதி மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

''உலக அளவில் கடல் பாம்புகளில் 47 வகைகள் உள்ளன. இவற்றில் இந்திய, இலங்கை கடல்களில் 20 வகைகள் மட்டுமே உண்டு. கடல் பாம்புகளுக்கு பெரும்பாலும் செதிள்கள் இருக்காது.

கடல் பாம்புகள் திறந்த கடல் பரப்புகளில் வசிக்கக்கூடியவை. கடலின் மேற்பரப்பில் நீந்தும் பழக்கம் உள்ளவை கடல் பாம்புகள். கடலின் மேல் பரப்பில் அசையாமல் மிதந்தபடியே தனது நிழலில் ஒதுங்க வரும் மீனை இது ஏமாற்றி இரையாக்கக்கூடியது. தரையில் வாழும் பாம்புகளை விட 10 மடங்கு மிகக் கொடிய நஞ்சினை கொண்டவை கடல் பாம்புகள். இதனால் வலையில் சிக்கும் கடல் பாம்புகளை மீனவர்கள் மிக கவனமாக வலையில் இருந்து அகற்றி மீண்டும் கடலில் எறிந்து விடுவார்கள்.

கூடையில் சேகரிக்கப்பட்டிருக்கும் கடல் பாம்புகள்.

கடல் பாம்புகள் அனைத்துமே நுரையீரல் மூலம் சுவாசிக்கக் கூடியவை. மூச்சுவிட குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒரு முறை கடல்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசிக்க வேண்டும். இதனால் கடல் பாம்புகளை நீரை விட்டு சற்று நேரம் தூக்கிப் பிடித்தால் மூச்சு திணறி இறந்துவிடும்.

புயல் மற்றும் கடல் சீற்றங்கள் அடங்கி ஒரு வாரம் கழித்து மீன்பிடித்திருக்கும் மீனவர்களின் வலையில் பெரும்பாலும் கடல் பாம்புகள் சிக்கியிருப்பது இலங்கை மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முன்பே மீனவர்களை எச்சரிக்கும் வகையில் மட்டக்களப்பு கடற்கரையில் கடல் பாம்புகள் அதிகளவில் கரை ஒதுங்கியது. இது குறித்த அபாயங்களை அரசு உடனே விளக்கமளிக்க வேண்டும்'' என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Share This
Previous Post
Next Post

comments

0 comments: