Monday, February 19, 2018

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 12 ராசிகளுக்கும்

Advertisement
மேஷராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது.
சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் விவாதம் செய்யாமல், அனுசரித்துச் செல்வது நல்லது.
குழந்தைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். ஆனால், தேவையான பணம் இருப்பதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 19, 22, 23, 24; பரணி: 19, 20, 23, 24, 25; கார்த்திகை: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அசுவினி: 20, 21, 25; பரணி: 21, 22; கார்த்திகை: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
rishaba_16411ரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை: 19, 20, 21, 24, 25; ரோகிணி: 20, 21, 22, 25; மிருகசீரிடம்: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்:  2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 22, 23; ரோகிணி: 19, 23, 24; மிருகசீரிடம்: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
mithuna_16267மிதுனராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும்.
பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.
புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.
கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம்: 19, 21, 22, 25; திருவாதிரை: 19, 20, 22, 23, 24; புனர்பூசம்: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 20, 23, 24; திருவாதிரை: 21, 25; புனர்பூசம்: 22
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே
kadaga_16065கடகராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.
நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.
அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 19, 20, 21, 23, 24, 25; பூசம்: 20, 21, 22, 24, 25; ஆயில்யம்: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 22; பூசம்: 19, 23; ஆயில்யம்: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
simma_16013சிம்மராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 19, 22, 23, 24; பூரம்: 19, 20, 23, 24, 25; உத்திரம்: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மகம்: 20, 21, 25; பூரம்: 21, 22; உத்திரம்: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
kanni_16408கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம்.
பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனவி இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 19, 20, 21, 24, 25; அஸ்தம்: 20, 21, 22, 25; சித்திரை: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திரம்: 22, 23; அஸ்தம்: 19, 23, 24; சித்திரை: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 
dhulam_16133துலாம்ராசி அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர் மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 19, 21, 22, 25; சுவாதி: 19, 20, 22, 23, 24; விசாகம்: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
சித்திரை: 20, 23, 24; சுவாதி: 21, 25; விசாகம்: 22
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
viruchi_16564விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கைத் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 19, 20, 21, 23, 24, 25; அனுஷம்: 20, 21, 22, 24, 25; கேட்டை: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்: 5, 8
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 22; அனுஷம்: 19, 23; கேட்டை: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்  காணக் கண் அடியேன் பெற்றவாறே
dhanushu_16384தனுசுராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டி வருவார்கள்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்புத் தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.
மாணவ மாணவியர் தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 19, 22, 23, 24; பூராடம்: 19, 20, 23, 24, 25; உத்திராடம்: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 20, 21, 25; பூராடம்: 21, 22; உத்திராடம்: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை 
mgaram_16119மகரராசி அன்பர்களே!  பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 19, 20, 21, 24, 25; திருவோணம்: 20, 21, 22, 25; அவிட்டம்: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 22, 23; திருவோணம்: 19, 23, 24; அவிட்டம்: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்த வர்க்கெலாம்
நன்னெறியாவது நமசிவாயவே. 
kumba_16461கும்பராசி அன்பர்களே! வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 19, 21, 22, 25; சதயம்: 19, 20, 22, 23, 24; பூரட்டாதி: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 20, 23, 24; சதயம்: 21, 25; பூரட்டாதி: 22
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 
meenam_16247மீனராசி அன்பர்களே!   பணப்புழக்கம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிரத்தை எடுத்துப் படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கில்லை.
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 19, 20, 21, 23, 24, 25; உத்திரட்டாதி: 20, 21, 22, 24, 25; ரேவதி: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்:  3, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 22; உத்திரட்டாதி: 19, 23; ரேவதி: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
Share This
Previous Post
Next Post

comments

0 comments: